அன்பு வாசகர்களே !!!
வணக்கம். அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள். ஆனந்தசந்திரிகை 01-31-2019 இதழில் …
- தலையங்கம்: வாசகர்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் கூறும் ஆசிரியர் குழுவினர், நமது இணையதளத் தமிழ்ப் பள்ளியின் தமிழ்த் திறனாய்வுத் தேர்வினை அறிவிக்கிறார்கள்.
- தையே வருக வருக: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் ந. வீரா தை மகளை வரவேற்கும் கவிதையில் உழவனுக்கு இன்னும் ஒரு வழி பிறக்கவில்லை என்று ஆதங்கப் படுகிறார்.
- வாழும் கலை: “செல்வம் சகடக்கால் போல வரும்” என்று நாலடியார் சொல்கிறது. செல்வம் மட்டும்தானா?” என்று ஒரு கேள்வியை எழுப்பி தன்னுடைய “சகடக்கால்” என்ற கதையில் அதற்குப் பதிலும் சொல்லுகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
- ஆமை கொடிது: “ஆமை ஒரு சாதுவான பிராணி, அதனைக் கொடியது என்று கூற முடியாது” முதன்முறையாக நமது பத்திரிகையில் எழுதும் கவிஞர் கவிதா எந்த ஆமையைக் கூறுகிறார் என்று படித்துத்தான் பாருங்களேன்.
- ஈராக் போர்முனையில்: “சாக்கடல் (Dead sea) இங்கு தான் இருக்கிறது. கடல் நீரின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் இயல்பாக மிதக்க முடியும். இந்த நீரில் உயிரினங்கள் வாழ இயலாது. அதையும் பார்க்க முடியவில்லை. இதெல்லாம் இங்கு இருப்பது முன்பே தெரியாமல் போய்விட்டது”. என்று வருந்தி எழுதியுள்ளார் ஆசிரியர் ஷாகுல்.
- உண்மையான ஞானம்: “அவன் எல்லோரையும் ஏளனமாக நோக்க ஆரம்பித்தான். தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை. பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமாகக் கேள்வி கேட்டு, அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து, அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி செய்யத் தொடங்கினான்.” இப்படியிருந்த மாணவனை எப்படித் திருத்தினார் ஆசிரியர் என்று இக்கதையில் விளக்குகிறார் கேயென்னார்.
- தைப்பூசத் திருநாள்: ஆறுமுகனை ஆராதிக்கும் அழகான கவிதை. தமிழ்க் கடவுளைத் தமிழால் போற்றி வணங்குகிறார் கேயென்னார்.
- திரை விமர்சனம்: “ஒரு காட்சியில் சிகரட் பிடிப்பது கெடுதலென்றும் அதை அனுபவத்தில் உணர்ந்தே சொல்லுவதாகவும் ரஜினி சொல்கிறார். 165 ஆவது படத்தில், 60 வயதைத்தாண்டி அரசியலுக்கு வந்தபின்னர் ரஜினி சொல்வதை, அவரைப்போலவே ஸ்டைலாக புகைபிடிக்கத் துவங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காதில் போட்டுக்கொள்வார்களா என்று தெரியவில்லை” என்று சமூக அக்கறையுடன் பேட்ட திரைப்படத்தை விமர்சிக்கிறார் திருமதி. லோகமாதேவி.
- மக்களால், மக்களுக்காக: இப்போது இந்தியா முழுவதும் ஒலிக்கத் தொடங்கி விடும் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…” என்று அரசியல்வாதிகள் செய்யும் வாக்குறுதிகள். மக்களின் வாக்கினை உறுதி செய்வதற்காக இதைக் கொடுப்பதால் அதனை வாக்குறுதிகள் என்று சொல்கிறார்களோ என்னவோ? வரும் மே மாதம் தேர்தல் முடியும் வரை இந்த ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும்.” என்று ஆரம்பித்து அரசியல்வாதிகளின் வாக்குறுதியை அலசுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
- பொங்கல் விழா: அமெரிக்க டல்லஸ் மாநகரின் ஃப்ரிஸ்கோ நகரில் சனிக்கிழமை மாலை ஜனவரி 19 ஆம் தேதி 6.30 மணிமுதல் 11.00 மணிவரை “டாலஸ் தமிழ் மன்றம்” 2019 பொங்கல் விழாவை கொண்டாடியது. இந்த பொங்கல் இசை விழாவில் இலங்கை வானொலி புகழ் அப்துல் ஹமீது அவர்களைச் சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து அவருடைய 40 ஆண்டுகள் “பாட்டுக்கு பாட்டை” டல்லாஸ் பாடகர்கள் பங்கு பெறும் வகையில் “டல்லஸ் தமிழ் மன்றம்” ஏற்பாடு செய்திருந்தது”. இந்த நிகழ்வை விளக்குகிறார் ஆசிரியர் மறைமலை.
- மழலை மழைத்துளிகள்: நிலவையும், பெண்ணையும், பாரதியையும் போற்றிப் பாடாத தமிழ்க் கவிஞர் இவ்வுலகில் இல்லை என்று சொல்லலாம். கவிஞர் மணிமீ கனத்த மீசை பாரதியை மட்டுமல்ல அவர் கொள்கைகளான ஆலயம் தொழுவதையும், படித்து உயர்வதையும் தன் மழலைக் கவிதைகளின் பாடியிருக்கிறார்.
- பச்சை நிறமே…: “பிசின் போன்ற திரவத்தை எறும்புகளுக்காக சுரக்கும் மாமரங்களிலும், வாசனையாக சுவையுடனிருக்கும் மகரந்தத்துகள்களையுடைய மலர்களுடன் கூடிய கொய்யா மரங்களிலும் எப்போதும் எறும்புகள், இருப்பதைக் காணலாம்”. அப்படியென்றால் கொய்யாப் பழத்தைச் சாப்பிட எறும்பு வரலையா? என்று வியக்க வைக்கிறார் திருமதி. லோகமாதேவி.
குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.
படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.
Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.